Tuesday, July 14, 2020

மாஸ்க்கும் குல்லாவும்!

திருவாளர் டிரம்ப், இரண்டு நாட்களுக்கு முன்புதான் கொரானாவிலிருந்து தற்காத்துக்கொள்ள,  மாஸ்க் அணிந்துள்ளார் என்கிற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
 பல நாட்களுக்கு முன்பே,  கொரானாவிலிருந்து தப்பிக்க ஒரேவழி மாஸ்க் மட்டும்தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

 இப்பதான் புரியுது, உலகெங்கிலும்  இன்னும் பலர் ஏன் மாஸ்க் அணியாமல் சுற்றுகிறார்களென்று. 'தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி!'

நம் நாட்டில்கூட, உயர் பொறுப்பிலுள்ள பலர், மாஸ்க் அணியாமல் அல்லது தாடையில் மாட்டிக்கொண்டு 'போட்டோவிற்கு போஸ்' கொடுக்கும் நடைமுறை அதிகளவில் உள்ளது. 

 நான் படித்தபோது, ஆரம்பப்பள்ளி பாடத்தில் ஒரு கதை வைத்திருப்பார்கள். 
அதாவது, ஒரு குல்லா வியாபாரி குல்லாவை கூடையில்வைத்து தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் களைப்பின் காரணமாக, ஒரு மரத்தின் நிழலில் கூடையை வைத்துவிட்டு தூங்கிவிடுவார். பின்பு, கண் விழித்துப்பார்க்கும்போது அவர் தலையில் போட்டிருந்த குல்லா தவிர, கூடையிலிருந்த குல்லாவையெல்லாம் மரத்தில் உள்ள குரங்குகள் எடுத்து தலையில் போட்டிருக்கும். குல்லா வியாபாரி அதிர்ச்சியில் செய்வதறியாது, கற்களை எடுத்து குரங்கின் மீது வீசுவார். உடனே, குரங்குகள் மரத்திலிருக்கும் காய்களை பறித்து  குல்லா வியாபாரியின் மீது வீசும். இதனைப்பார்த்து சுதாரித்த குல்லா வியாபாரி, தான் போட்டிருந்த குல்லாவை எடுத்து குரங்குகளின் மீது வீசுவார். உடனே, குரங்குகள் அனைத்தும் அவைகளின் தலையிலிருந்த குல்லாவை எடுத்து வியாபாரியின் மீது வீசும். உடனடியாக, மகிழ்ச்சியுடன் அனைத்து குல்லாக்களையும் எடுத்துக்கொண்டு செல்வதாக கதை முடியும். 

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது, மற்றவர்களை எதை செய்யவைக்க வேண்டுமோ,  அதை நாம் முதலில் செய்யவேண்டும்.
 இதுகூட தெரியாதவர்களை என்னவென்று சொல்வது?

2 comments:

  1. உண்மைதான்! எதுவும் சொல்வதற்கில்லை :(.

    ReplyDelete