Wednesday, May 25, 2011

கல்லூரியில் சேரும் முன், ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!



+2 தேர்வு முடிவு வந்து எல்லோரும் கல்லூரியில் சேரும் நேரம். இப்பொழுது, மாணவர்களும் பெற்றோரும் மேற்கொண்டு எந்த படிப்பில் சேர்வது என்பதில் மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். கடைசியில் ஒருவாழியாக தனக்குப் பிடித்த, தனது பெற்றோருக்குப் பிடித்த அல்லது தனது நண்பர்கள் சேருகின்ற ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து விடுவார்கள். அப்பாடா, ஒரு வழியா பிள்ளையை கல்லூரியில் சேர்த்தாகிவிட்டது. இனி கவலையில்லை. பணம் மட்டும் கட்டினால் போதும் என்று பெற்றோர்கள் நினைத்தால். அப்பொழுதான் வரும் பிரச்சினை. கல்லூரியிலிருந்து வந்து "எனக்கு, இந்த படிப்பு பிடிக்கவில்லை" என்பார்கள். பெற்றோருக்கு மிளகாயைக் கடித்த மாதிரி இருக்கும். இது அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் நிகழ்வல்ல. இன்று அதிகளவில், என் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் நடப்பதால்தான் இந்தப் பதிவு. சில உதாரணங்களை இங்கே பார்ப்போம்.

எனது நண்பரின் மகன் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் BDS முதலாமாண்டு தேர்வில் வெற்றிப் பெற்ற பிறகு, தனக்கு படிப்பு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். அவர்கள் தனியாகவும், நண்பர்கள் மூலமும் எடுத்துச் சொல்லியும், அந்த மாணவர் கேட்கவில்லை. பிறகு, அவர் விருப்பப் படியே B.Sc. (nautical science)-ல் சேர்ந்து படித்து, இப்பொழுது ஒரு தனியார் கம்பெனியில் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

இன்னொரு நண்பர் மிகப் பிரபலமான என்ஜினியரிங் கல்லூரியில் மிகச் சிரமப்பட்டு சேர்த்து விட்டார். அந்தப் பெண்ணும் ஒரு வருடம் கூடப் படிக்கவில்லை. படிப்பைப் பாதியில் விட வேண்டிய சூழ்நிலை வந்து வந்துவிட்டது.

இன்னொரு மாணவனும் இதே நிலை வந்தது. படிப்பு பாதியில் நின்று விட்டது. இப்பொழுது வேறு கல்லூரியில் இடம்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு நண்பரின் மகன் +1 யில் சேரும் பொழுது கணினி அறிவியல் பாடம்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து பள்ளியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தப் பிறகு, "நான் டாக்டருக்குப் படிக்க வேண்டும். என்னை அறிவியல் பிரிவில் சேர்த்து விடுங்கள். இல்லையெனில் என் வாழ்வே பாழாகிவிடும்" என்றான். அவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு பிறகு மீண்டும் மறு வருடம் +1 யில் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.

இன்னொரு மாணவன் தான் விரும்பிய B.Tech(IT) யில் சேர்ந்து முதலாமாண்டு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்து, தற்கொலை செய்து கொண்டது இன்னும் சோகம்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டுப் போகலாம். இதிலெல்லாம் மற்ற மாணவர்களின் வாய்ப்பு பறிபோகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. எனவேதான், அரசு இந்த வருடம் முதல், எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பிலிருந்து ஒரு மாணவர் விலகும் நிலையில் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.. விரிவாக அறிய தினமணி பார்க்கவும்.

இது மட்டும் இவர்களைத் திருத்தி விடுமா என்றால், அதற்கான வாய்ப்பு குறைவே. ஏனெனில், மேற்கண்ட உதாரணத்தில் ஏகப்பட்ட பணத்தை இழந்த பிறகுதான், அந்த மாணவர்களும் பெற்றோரும் வேறு படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கல்லூரியில் சேரும் முன்பு, நாம் சேருகிற படிப்பின் பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, சமூகத்தில் உள்ள மரியாதை போன்றவைகளை நன்கு ஆராய்ந்து. அதன் பிறகு, ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். அது மாணவனின் சம்மதத்தோடு கூடிய பெற்றோரின் முடிவாக இருத்தல் நலம். இப்பொழுது எல்லோரும் "பிள்ளைகள் ஆசைப்படுவதில் சேர்த்து விடுங்கள்" என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி சேர்த்தால், அது நூறு சதவிகிதம் சரியாக அமைவதில்லை என்பதே என்னுடைய எண்ணம்!

12 comments:

  1. //அது மாணவனின் சம்மதத்தோடு கூடிய பெற்றோரின் முடிவாக இருத்தல் நலம்.//
    மிக நல்ல அறிவுரை!

    ReplyDelete
  2. அருமையான பதிவு. இறுதியாகச் சொல்லியிருப்பதே சரி. நிறை குறைகளை சேர்ந்து ஆராய்ந்து விவாதித்து முடிவெடுத்தால் நன்று.

    ReplyDelete
  3. தற்போதைக்கு தேவையான பதிவு...

    ReplyDelete
  4. அது மாணவனின் சம்மதத்தோடு கூடிய பெற்றோரின் முடிவாக இருத்தல் நலம். இப்பொழுது எல்லோரும் "பிள்ளைகள் ஆசைப்படுவதில் சேர்த்து விடுங்கள்" என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி சேர்த்தால், அது நூறு சதவிகிதம் சரியாக அமைவதில்லை என்பதே என்னுடைய எண்ணம்!


    ..... நூறு சதவீதம் என்று சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். நீங்கள் முதலில் சொல்லியது போல, மாணவர்களின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஆலோசனை செய்து முடிவு எடுக்கலாம்.

    ReplyDelete
  5. அது மாணவனின் சம்மதத்தோடு கூடிய பெற்றோரின் முடிவாக இருத்தல் நலம். //
    தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்த பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. நீங்கள் அடிக்கோடிட்டு சொல்லி இருப்பது
    நூற்றுக்கு நூறு சரி
    மாணவனின் சம்மதத்தோடு
    பெற்றோர்கள் முடிவெடுத்தால்தான்
    சரியாக இருக்கும்
    மாணவர்களின் முடிவு சரியாக இருக்கும் என
    பெற்றோார்கள் முடிவெடுப்பது
    தவறாகத்தான் முடியும்
    என்பது எனது அனுபவம்
    நல்ல பயனுள்ள பதிவு

    ReplyDelete
  7. அப்பாவின் அனுபவமும் பொறுப்பும் பதிவில் பளிச்சென தெரிகிறது , நல்ல தீர்வும் தந்துள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
  8. சென்னை பித்தன் said...

    * < //அது மாணவனின் சம்மதத்தோடு கூடிய பெற்றோரின் முடிவாக இருத்தல் நலம்.//
    மிக நல்ல அறிவுரை!>*

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  9. ராமலக்ஷ்மி said...

    //அருமையான பதிவு. இறுதியாகச் சொல்லியிருப்பதே சரி. நிறை குறைகளை சேர்ந்து ஆராய்ந்து விவாதித்து முடிவெடுத்தால் நன்று.//

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  10. # கவிதை வீதி # சௌந்தர் said...

    // தற்போதைக்கு தேவையான பதிவு...//

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  11. Chitra said...

    //அது மாணவனின் சம்மதத்தோடு கூடிய பெற்றோரின் முடிவாக இருத்தல் நலம். இப்பொழுது எல்லோரும் "பிள்ளைகள் ஆசைப்படுவதில் சேர்த்து விடுங்கள்" என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி சேர்த்தால், அது நூறு சதவிகிதம் சரியாக அமைவதில்லை என்பதே என்னுடைய எண்ணம்!


    ..... நூறு சதவீதம் என்று சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். நீங்கள் முதலில் சொல்லியது போல, மாணவர்களின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஆலோசனை செய்து முடிவு எடுக்கலாம்.//

    கருத்துக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  12. இராஜராஜேஸ்வரி said...

    **

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete